தொன்மையான இலக்கண இலக்கியங்களை மக்கள் எளிதாகப் புரிந்து கொள்ளும் வகையில் எளிய நடையில் எடுத்துக் கூறி, அவற்றை மக்களிடம் கொண்டு சேர்த்தவர்களே உரையாசிரியர்கள். அந்த அடிப்படையில் தொன்மையான இலக்கிய நூல்களுக்கு உரை வகுத்த உரையாசிரியர்களைப் பற்றியும் அவர்களது உரைத்திறன் பற்றியும் விளக்குவதாக இந்த நூல் அமைந்துள்ளது.
அடியார்க்கு நல்லார், நச்சுனார்க்கினியர் என்று தொடங்கி புலவர் குழந்தை, சி. கே. சுப்பிரமணிய முதலியார், கா.மு. ஷெரீப் என 19 உரையாசிரியர்களைப் பற்றிய பல அரிய தகவல்களை இந்நூல் உள்ளடக்கி உள்ளது. இந்த உரையாசிரியர்கள் பல துறை அறிஞர்களாக விளங்குவதையும், சமயம் சாராது இயங்கியதையும் காண முடிகிறது. இவர்கள் எண்ணற்ற மேற்கோள்களைத் தங்கள் உரைகளில் எடுத்துக் காட்டியுள்ளனர். சொற்களுக்குப் பொருள் கூறுவது மட்டுமே அவர்கள் நோக்கம் அல்ல: கவிதையின் ஆழ்நிலைப் பொருளை விளங்க வைப்பதையே அவர்கள் இலக்காகக் கொண்டு செயல்பட்டுள்ளதைக் காண முடிகிறது.
தொன்மையான இலக்கியத்தின் எல்லா நூல்களும் உரைபெறவில்லை. இதற்குச் சான்றாக, சிலப்பதிகாரம் இரு உரைகளைப் பெற்றபோது மணிமேகலை உரையாசிரியர்களின் கவனிப்பைப் பெறவில்லை என்பதைக் கூறலாம். உரைகூறுவதற்கான நூல்களைச் சமய அடிப்படையில் தேர்வு செய்ததற்கான சான்றுகள் இல்லை. சைவரான நச்சினார்க்கினியர் சமணக்காப்பியமான சிந்தாமணிக்கு உரைசெய்துள்ளதை இதற்குச் சான்று காட்டலாம். இவர் சிந்தாமணியில் துலங்கும் சமணக் கோட்பாடுகளைச் சுட்டிக்காட்டவும் தயங்கவில்லை. உரையாசிரியர்கள் தொடர்ந்து வாசிக்கப்பட்டு வந்த நூல்களைச் சமகால வாசகர்களுக்கு அறிமுகம் செய்கின்றனர்.
இலக்கிய உரையாசிரியர்கள் குறித்த இந் நூலின் ஆசிரியர் முனைவர் இரா. இராமகிருட்டிணன். இவர் ஒவ்வொரு உரையாசிரியரை பற்றியும் எளிய நடையில் கருத்துக்களை எடுத்துரைத்துள்ளதோடு தேவையான இடங்களில் பல்வேறு சான்றுகளையும் காட்டிச் சென்றுள்ளார். இந்த நூலின் முதலில் உரையாசிரியர்களைப் பற்றிச் கருக்கமான விளக்கமும், பின்னர் இவர்களைப் பற்றி விரிவான செய்திகளும் இடம் பெற்றுள்ளன.
Be the first to rate this book.