நாம் அடிக்கடி நினைவுகூர விரும்புவதும், நினைக்கும்போதே மகிழ்ச்சி அளிப்பதும் நமது குழந்தைப் பருவம்தான். அந்த இனிய காலத்தின் நினைவுகள் எப்போதும் நம் மனதில் இதமான உணர்வுகளை ஏற்படுத்துகின்றன.
குழந்தைப் பருவத்தில்தான் இது ஏன், எப்படி என்கிற எதையும் அறியக்கூடிய ஆர்வம் அதிகமாக இருக்கிறது. எந்த வேறுபாடும் பார்க்காமல், அனைத்து மனிதர்களிடமும் உயிரினங்களிடமும் அன்பு செலுத்த முடிகிறது. குழந்தைப் பருவத்தில்தான் பொதுவாகக் கவலைகள் இருப்பதில்லை; பயம் இருப்பதில்லை; யார் என்ன சொல்வார்களோ என்கிற தயக்கம் இருப்பதில்லை. மகிழ்ச்சியும் அன்பும் நிறைந்திருக்கும் இந்தக் குழந்தைப் பருவத்துக்கு மீண்டும் செல்ல மாட்டோமா என்று ஏங்காதவர்கள் உண்டா?
ஒவ்வொருவருக்கும் அவரவர் குழந்தைப் பருவம் மிகவும் முக்கியமானது என்றாலும் நமக்கெல்லாம் நன்கு தெரிந்த ஆளுமைகளின் குழந்தைப் பருவ அனுபவங்கள் எப்படி இருந்திருக்கும் என்கிற ஆர்வம் உண்டாகிறது அல்லவா!
அவர்களும் நம்மைப் போலவே குறும்புகள் செய்திருக் கிறார்கள், பெரியவர்களிடம் திட்டு வாங்கியிருக்கிறார்கள், சரியாகச் செய்வதாக நினைத்து, தவறாகச் செய்துவிட்டு முழித்திருக்கிறார்கள் என்பதை எல்லாம் படிக்கும்போது சுவாரசியமாக இருக்கிறது. நம்மைப் போலவே அவர்களும் எளிய பின்னணியிலிருந்துதான் பிற்காலத்தில் வல்லுநர்களாக உருவாகியிருக்கிறார்கள் என்பதையும் தெரிந்துகொள்ள முடிகிறது. அது நமக்கும் நம்பிக்கையை அளிக்கிறது.
Be the first to rate this book.