இருபதாம் நூற்றாண்டின் இந்திய தேசிய இயக்கம் உருவாக்கித் தந்த மகாகவி பாரதியார். இவரைப் பற்றியும் இவரது கவிதைகள் குறித்தும் எழுத்தாளரும், கவிஞரும், விமர்சகருமான தொழுசி ரகுநாதன் அவர்கள் எழுதிய சில கட்டுரைகளின் தொகுப்பாக இந்த நூல் விளங்குகிறது.
பாரதியாரின் எழுத்துக்களையும், அவரது பன்முகத்தன்மைகளையும் அவரது சிந்தனைகளின் ஆழத்தையும் ஆய்ந்துரைக்கும் வகையில் இந்நூலின் கட்டுரைகள் அமைந்துள்ளன. இளங்கோவைப் போல கம்பனைப் போல பாரதியும் தமிழ் இலக்கிய பாரம்பரியத்துக்கு ஏற்ப நமக்கு பாஞ்சாலி சபதத்தை உருவாக்கித் தந்துள்ளார் என்கிறது இந்நூலின் முதல் கட்டுரை.
கரும்புத் தோட்டத்திலே என்னும் கவிதையின் பிறப்புக்கான காரணத்தை ஆராய்கிறது ஒரு கட்டுரை, மாயை என்னும் வேதாந்த சொல்லுக்குத் தேசியப் பொருளை வழங்கியவர் விபின சந்திர பாலர். இதனையே தன் பாடல்களில் பாரதி பிரதிபலித்தார். நாட்டில் தேசிய கொடியின் முக்கியத்துவம் உணரப்பட்ட வேளையில் எழுதப்பட்டதே தாயின் மணிக்கொடி என்னும் பாடல்
செந்தமிழ் நாடு என்று பாரதி பாடிய பாடல், ஒரு பாட்டுப் போட்டிக்காக எழுதப்பட்டது. பாரதியின் கிருத யுகம் என்பது நாடு ஆனந்த சுதந்திரம் பெற்ற நிலையைக் குறிக்கிறது. என்பன போன்ற பல செய்திகளை இந்நூல் எடுத்துரைக்கிறது. இவற்றோடு பாரதியை தாகூரோடு ஒப்பிட்ட ஒரு கட்டுரையும் இந்நூலில் அமைந்துள்ளது. லெனின் பற்றி தமிழில் முதலில் குரல் கொடுத்தவர் பாரதியே என்பதைக் கூறுகிறது ஒரு கட்டுரை.
பாரதியின் தேசபக்தி, சமூகம், அரசியல் என்று பல வகைகளில் எழுந்த கட்டுரைகளின் தொகுப்பாக இந்த நூல் விளங்குகிறது. இவ்வாறு பாரதியைப் பன்முக நோக்கில் ஆய்ந்து, அவரைப் பற்றியும் அவரது கவிதைகளைப் பற்றியும் உலகிற்கு எடுத்துரைத்துள்ளது.
Be the first to rate this book.