ஆசைப்பட்ட பொருள் புதையலாகக் கிடைக்கிறபோது நாம் அடையும் மகிழ்ச்சிக்கு எல்லையுண்டா? அட!நினைத்த நேரத்தில் நினைத்த இடத்தில் எளிதாகக் கைகளுக்கு எட்டாத புதையல் குழந்தைகளுக்குக் கிடைத்தால் என்னவாகும்? அவர்களுக்கு மத்தியில் குதூகலமும் கொண்டாட்டங்களும் அதிகரிக்கும்.
ஆமாம். உலகப் புகழ்பெற்ற சித்திரக்கதைகள் கதைப் புதையலாக தமிழில் கிடைத்துள்ளன. ஏற்கனவே புக்ஸ் ஃபார் சில்ட்ரன் வெளியிட்ட கதைப் புதையல் புத்தகத் தொகுப்புக்கு பெற்றோர்கள், பள்ளிகள் மற்றும் சிறுவர்கள் தந்த உற்சாகமான வரவேற்பைத் தொடர்ந்து அண்மையில் கதைப் புதையல்II ஐ (எட்டு சித்திரக்கதைப் புத்தகத் தொகுப்பு) அப்பதிப்பகம் பதிப்பித்தது.
தமிழ் மற்றும் ஆங்கிலம் இருமொழிகளில் பக்கத்துக்குப் பக்கம் அழகிய சித்திரங்களுடன் எட்டுப் புத்தகங்களும் வெளியாகியுள்ளன. குழந்தை இலக்கிய எழுத்தாளர் கொ.மா.கோ.இளங்கோ அவர்கள் மொழியாக்கம் செய்திருக்கிறார் என்பது கூடுதல் சிறப்பு.
சரி. அப்படி என்னென்ன கதைகள்?வாருங்கள்.வாசித்துப் பார்ப்போம்.
அரோல்டும் ஊதாக்கலர் கிரேயானும்
அரோல்ட் என்கிற சிறுவனது கையிலொரு ஊதாக்கலர் கிரேயான் கிடைத்தது. அதைக்கொண்டு மனம்போன போக்கில் ஆசையாசையாய் வரைந்து பார்த்தான். அவன் வரைந்த சாலை, நிலா, காடு, கடல், படகு என அனைத்தும் தனக்கு எதிரில் உயிர்பெறுவதைக்கண்டு வியந்தான். தனது கைகளால் வரைந்த மலையில் ஏறியவன் தடுமாறிக் கீழேவிழ, ஒரு ராட்சச பலூனை வரைந்தான். அப்பலூன் கயிற்றைப் பிடித்தேறித் தப்பித்தான். குழந்தைகளுக்குப் பிடித்த சுவையான திருப்பங்களை உள்ளடக்கிய கதை. இக்கதையை எழுதியவர் திரு.க்ரோகட் ஜான்சன். 'வெஸ்டன் வுட் ஸ்டுடியோ' நிறுவனம் இக்கதையை குறும்படமாகத் தயாரித்து வெளியிட்டது. அரோல்டின் சாகச வரிசைத் திரைப்படங்கள் 'எம்மி விருது' பெற்றுள்ளன. 'தேசிய கல்விக் கூட்டமைப்பு'வெளியிட்ட உலகின் 100 புகழ்பெற்ற சிறுவர் கதைகளில் ஒன்றாக இப்புத்தகம் தேர்வாகியுள்ளது.
ராஜாவின் காலடி
அந்த நாட்டு மகாராஜா மகாராணியின் பிறந்தநாளை முன்னிட்டு,அவர்களுக்கு ஒரு விசேசமான பரிசுதர ஆசைப்பட்டார். மகாராணி படுத்துறங்கத் தேவையான கட்டில் அரண்மனையில் இல்லை. எனவே அவர் ஓர் அழகான கட்டில் செய்ய தலைமை அமைச்சரிடம் உத்தரவு பிறப்பித்தார். கட்டில் அளவு எவ்வளவு என்பது யாருக்கும் தெரியவில்லை. ஏனென்றால் உலகில் அதுவரை கட்டிலைப் பார்த்தவர் ஒருவர்கூட இல்லை. மகாராணிக்கு பிறந்தநாள் பரிசு கிடைத்ததா? அரண்மனைக்குள் நடந்தவை என்னவென்று தெரிந்துகொள்ள கதையைப் படியுங்கள். திரு.ரால்ப் மில்லர், ஜெர்மன் நாட்டவர். குழந்தைகளின் கணிதத் திறனை வளர்க்க உதவும் சித்திரக்கதைகள் பல எழுதியவர். 'ராஜாவின் காலடி' நிலையான அளவீடுகள் பற்றி சிறுவர்கள் அறிய உதவும் புத்தகம்.
ஆப்பிள் ஜானி
சுமார் 240 ஆண்டுகளுக்கு முன்னர் 'ஜான் சாப்மென்' என்ற ஒருவர் அமெரிக்காவில் வாழ்ந்தார். அவர் நாடு முழுக்க ஆயிரக்கணக்கான ஆப்பிள் விதைகளை விதைத்தார். பழங்குடியின மக்கள் பலர் அவரிடம் அன்போடு பழகினார்கள். அவரை 'ஆப்பிள் ஜானி' எனச் செல்லப்பெயர் வைத்து அழைத்தார்கள். ஆப்பிள் ஜானி உலகில் உள்ள அனைத்து இயற்கை ஆர்வலர்களைக் கவர்ந்த மனிதர். இதன் நூலாசிரியர் திருமதி. அலிகி லியாகுராஸ் ப்ரண்ட்பெர்கன், குழந்தை இலக்கிய எழுத்தாளர் மற்றும் ஓவியர். குழந்தைகளுக்காக 60 புத்தகங்கள் எழுதியவர். சிறந்த குழந்தை இலக்கிய புத்தகங்களுக்கான 'நியூயார்க் அறிவியல் கழக விருது' பெற்றவர்.
கடைசிப் பூ
உலகப்போரின் போது அதிக எண்ணிக்கையில் மக்கள் இறந்து போனார்கள். மனித நாகரிகங்கள் அழிந்தன. கலாச்சாரங்கள் காணாமல் போயின. நகரங்கள் தகர்க்கப்பட்டன. மொத்த பூமியும் அழிந்த பிறகு ஒரே ஒரு பூ மட்டும் உயிர் பிழைத்தது. அந்தக் கடைசிப் பூவை காப்பாற்றியது யார்? கதாசிரியர் திரு.ஜேம்ஸ் குரோவர் தர்பர் குழந்தை எழுத்தாளர், ஓவியர், பத்திரிக்கையாளர் மற்றும் திரைக்கதை ஆசிரியர். குழந்தைகளுக்காக அதிக காமிக்ஸ் புத்தகங்கள் எழுதி வெளியிட்டவர். 'கடைசிப் பூ' - 1939ம் ஆண்டு இரண்டாம் உலகப்போர் தொடங்கியபிறகு எழுதப்பட்ட கதை. உலக யுத்தத்திற்கு எதிராக எழுதப்பட்ட கதை.
எலி எப்படிப் புலியாச்சு?
திருமதி.மெர்சியா ஜோன் ப்ரெளன் எழுதிய 'எலி எப்படிப் புலியாச்சு?' அமெரிக்காவின் பிரபலமான 'கேல்ட்கொட் பதக்கம்' பெற்ற புத்தகம். துறவி தனக்குச் செய்த எல்லா நல்ல செயல்களையும் மறந்த அந்தப் புலி "நான் ஒரு காலத்தில் எலியாக இருந்தேன் என்று யாரும் என்னிடம் சொல்லக்கூடாது. அப்படிச் சொல்பவர்களை நான் கடித்துக் கொன்று விடுவேன்" என்றது.அப்போது அந்தத் துறவி ஒரு மந்திரம் செய்தார். அவருடைய மந்திரம் பலித்தது. திமிர்பிடித்து அலைந்த புலியின் தலைக்கனம் அடங்கியதா?வாசித்துப் பாருங்கள்.
ஸ்னிப்பியும் ஸ்னப்பியும்
ஸ்னிப்பியும் ஸ்னப்பியும் இரண்டு சிறிய வயல் எலிகள். அவை இரண்டும் நாள்முழுக்க வயல்வெளியில் ஓடியாடி விளையாடின. மாலைநேரத்தில் வயலின் ஒரு மூலையில் உள்ள வீட்டுக்குத் திரும்பின. அவை ஒருநாள் அம்மாவின் பின்னல்நூல்ப் பந்தை உருட்டி விளையாடியபடி ஒரு வீட்டை அடைந்தன. அதற்கு முன்பு அந்த இரண்டு எலிகளும் மனிதர்கள் வாழும் வீட்டைப் பார்த்ததில்லை. அங்கிருந்த ஒவ்வொரு பொருளையும் வியப்புடன் பார்த்தன. பலவகையான செடிகளையும் பூக்களையும்கூட கண்டு திகைத்துப்போயின. கடைசியில் அவை ஆபத்தை எதிர்கொண்டன. வயல் எலிகள் அந்த ஆபத்திலிருந்து எப்படித் தப்பித்தன? புத்தகத்தை வாங்கிப் படியுங்கள் குழந்தைகளே. கதாசிரியர் திருமதி.வண்ட கக், ஓவியக்கல்லூரியில் சேர்ந்து முறையாக ஓவியப் பயிற்சி பெற்றவர். குழந்தைகளுக்கான கதைகள் பல எழுதியவர். ஸ்னிப்பியும் ஸ்னப்பியும் ‘நியூபெரி கெளரவ விருதும்’ ‘லூயிஸ் கரோல் விருதும்’ பெற்ற புத்தகம்.
சிங்கத்தின் குகையில் சின்னக்குருவி
காட்டுராஜா சிங்கத்தின் வால் நாள்தோறும் நிறம் மாறிக்கொண்டிருந்தது. ஓர் அழகான சிகப்புக் குருவி அதைத் தொடர்ந்து கவனித்து வந்தது. முதலில் பச்சை நிறத்திலிருந்த சிங்கத்தின் வால்நுனிக் குஞ்சம் ஆரஞ்சு நிறம், நீலநிறம், சிகப்புநிறம் என ஒவ்வொருநாளும் மாறியிருந்தது. கடைசியில் ஒருநாள் வால் நிறம் மாறிவரும் மர்மத்தின் முடிச்சை அவிழ்த்தது சிங்கம். அதைப்பார்த்த சின்னக்குருவி எல்லையில்லா மகிழ்ச்சியில் பாட்டுப்பாடிக் கொண்டாடியது. ஆமாம்! நாமும் அதன் காரணத்தைத் தெரிந்து கொள்ளத்தானே வேண்டும். எழுத்தாளர் திருமதி எலிசா க்லெவென், 30 குழந்தைப் புத்தகங்களை எழுதியுள்ளார். ஓவியர் மற்றும் பத்திரிக்கையாளராகவும் பணியாற்றியுள்ளார். அமெரிக்க நூலகக் கழகம், நியூயார்க் டைம்ஸ், பால்லி நூலக ஆணையம், அமெரிக்க ஓவியக் கழகம் ஆகிய அமைப்புகளால் கெளரவிக்கப் பட்டவர். இக்கதையை பல பள்ளிக்குழந்தைகள் நாடகமாக அரங்கேற்றியுள்ளார்கள்.
வீ கில்லிஸ்
'வீ கில்லிஸ்' அமெரிக்காவின் புகழ்பெற்ற 'கேல்ட்கொட் விருது' (1939) பெற்ற புத்தகம். சுமார் 60 மொழிகளில் மொழியாக்கம் செய்யப்பட்ட புத்தகம். கதாசிரியர் திரு. மன்ரோ லீப், நாற்பதுக்கும் அதிகமான சிறுவர் புத்தகங்களை எழுதியவர். வீ கில்லிஸ் ஸ்காட்லாண்டில் வசிக்கும் ஓர் அநாதைச் சிறுவன். அவன் வருடத்தின் முதல் ஆறுமாதங்களில் தாய்வழிச் சொந்தக்காரர்களுடன் பள்ளத்தாக்குப் பகுதியில் வசிப்பான். அடுத்த ஆறுமாதங்களில் தந்தைவழிச் சொந்தக்காரர்களுடன் மலைப்பிரதேசத்தில் வசிப்பான். இருதரப்பு சொந்தங்களும் அவனைத் தம்மிடத்தில் வைத்துக்கொள்ள முடிவுசெய்கிறார்கள். ஆனால் அவர்களின் நிர்ப்பந்தத்தை ஏற்க மறுக்கும் கில்லிஸ் தனக்கான ஒரு இடத்தைத் தேர்வு செய்கிறான். இசைக் கலைஞனாக உருவாகும் வீ கில்லிஸ் உங்களுக்கும் இசை பயிற்றுவிப்பானா என்பதைக் கேட்டுத் தெரிந்து கொள்ளுங்களேன்.
Be the first to rate this book.