தங்கம்,வைரம்,வைடூரியம் ஆகியவை ஒரே இடத்தில் கிடைத்தால், பொக்கிஷப் புதையல் என்பார்கள். அப்படி,உலகப் புகழ்பெற்ற எழுத்தாளர்களின் கதைகள் அடங்கிய எட்டு குட்டிக் குட்டிப் புத்தகங்கள், கதைப் புதையலாக வெளிவந்திருக்கின்றன. தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் பக்கத்துப் பக்கம் ஓவியங்களுடன், எளிய அழகு நடையில் அசத்தும் கதைகளில் இருந்து சில துளிகள்...
குட்டன் ஆடு /மன்ரோ லீப்/
அமெரிக்கா தலைமை ஆடு வழிகாட்டலில் மேய்ச்சலுக்குக் கிளம்பிய ஆட்டு மந்தை,பெரிய ஆபத்தில் மாட்டிக்கொள்கிறது. அதில்,குறும்புக்கார குட்டன் ஆடு எப்படித் தப்பியது என்ற த்ரில், படிக்கும் அனைவரையும் தொற்றிக்கொள்ளும். இந்த நூலின் கதையும் ஓவியங்களும் மன்ரோ லீப்.
அழகிய பூனை /வண்ட கக்/
அமெரிக்கா ஓர் ஊரில் தாத்தாவும் பாட்டியு தனியே வாழ்ந்தார்கள். ‘ஒரு பூனை நம்மோடு இருந்தால் நன்றாக இருக்கும்’ என்று ஆசைப்பட்டார் பாட்டி. உடனே தாத்தா, பூனையைத் தேடிப் புறப்பட்டார். வீடு திரும்பியபோது, அவரோடு லட்சக்கணக்கான பூனைகள்.பாட்டிக்கு அதிர்ச்சி. லட்சக்கணக்கான பூனைகளில் இருந்து ஒரு பூனையை எப்படித் தேர்ந்தெடுத்தார் என்பது ரொம்ப சுவாரஸ்யம்.
மந்திர விதைகள் /மித்சுமாசா அனோ/
ஜப்பான் இது, கணக்குக் கதை, ‘ஜாக்’ எனும் சிறுவனுக்கு, ஒரு மந்திரவாதி இரண்டு மந்திர விதைகளைக் கொடுத்தார். அதில் ஒன்றைச் சாப்பிட்டால், ஒரு வருடத்துக்குப் பசிக்காது. ஒன்றை விதைத்தால், ஒரு வருடத்தில், இரண்டு மந்திர விதைகளைக் கொடுக்கும். ஜாக்கும் சில ஆண்டுகளுக்கு அப்படியே செய்தான். அடுத்த ஆண்டு, இரண்டு விதைகளையும் விதைத்தான். பிறகு என்ன ஆனது? படிக்கும்போது நாமே கணக்கு போடுவது சுவாரஸ்யமாக இருக்கும்.
உயிர் தரும் மரம் /ஷெல் சில்வர்ஸ்டீன்/
அமெரிக்கா ஓர் ஆப்பிள் மரத்துக்கும் ஒரு சிறுவனுக்கும் நடக்கும் கதை. இருவரும் பேசிக்கொள்கிறார்கள். விளையாடுகிறார்கள். அவன் பெரியவனானதும் மரத்தைப் பார்க்க வரவே இல்லை. மரம் கவலைப்பட்டது. திடீரென ஒரு நாள் வருகிறான். அப்போது அவன் கேட்கும் விஷயம் என்ன? அதற்கு மரம் என்ன செய்தது? பிறகு என்ன நடந்தது? படித்து முடிக்கும்போது நம் கண்ணில் கண்ணீர் துளிர்விடும்.
தப்பியோடிய குட்டி முயல் /மார்கரெட் வைஸ் பிரவுன்/
அமெரிக்கா ஒரு குட்டி முயலுக்கும் அதன் அம்மாவுக்கும் நடக்கும் உரையாடலே இந்தக் கதை. குட்டி முயல், ‘வீட்டிலிருந்து தப்பித்துச் செல்லப் போகிறேன்’ என்றதும், அம்மா முயலும் ‘நானும் உன்னோடு வருவேன்’ என்கிறது. குட்டி முயல், ‘நான்,மீனாக மாறி நீந்திச் செல்வேன். நீ என்ன செய்வாய்?’ என்றதும், அம்மா முயல், ‘நான் மீனவனாக மாறி உன்னைப் பின் தொடர்வேன்’ என்கிறது. இப்படியே இரண்டுக்கும் நடக்கும் உரையாடலைப் படிக்கும்போது, நம்மை அறியாமலே சிரிப்பு வரும்.
குவா...குவா...குவா...குஞ்சுவாத்து பிங் /மார்ஜோரி ப்ளேக், கர்ட் வீஸ்/
அமெரிக்கா ஒரு படகில்68வாத்துகள் வாழ்ந்தன. அவற்றை அதன் முதலாளி திறந்துவிட்டு, மாலையில் பாட்டுப்பாடி அழைப்பான். கடைசியாக எந்த வாத்து வருகிறதோ, அதை ஓர் அடி கொடுத்து உள்ளே அனுப்புவான். ஒரு நாள் மாலையில், கடைசி வாத்தாக ‘பிங்’வரும்படி ஆகிவிட்டது. அதனால், படகில் ஏறாமல் செடியின் அடியில் ஒளிந்துகொண்டது. படகும் புறப்பட்டுப் போய்விட்டது. தின்பண்டத்துக்கு ஆசைப்பட்டு, ஒரு சிறுவன் கையில் மாட்டிக்கொள்கிறது பிங். சிறுவனின் அப்பா, பிங்கைக் கொல்லத் தயாராகிறார். பிங் அவர்களிடமிருந்து தப்பியதா?
பெர்டினன் /மன்ரோ லீப்/
அமெரிக்கா ஸ்பெயின் நாட்டில் நடைபெறும் கதை. ‘பெர்டினன்’எனும் கன்றுக்குட்டிக்கு யாரோடும் சேர்ந்து விளையாடப் பிடிக்கவில்லை. எப்போதும் மரத்தின் நிழலில் அமர்ந்து, பூக்களின் வாசனையை முகர்ந்து, தனிமையை விரும்பும். பெரிய மாடாக மாறியபோதும் தன் பழக்கத்தை மாற்றிக்கொள்ளவில்லை. பெர்டினனை காளைச் சண்டைக்காக அழைத்துச் செல்கிறார்கள். சண்டை முடிந்ததும் கொன்றுவிடுவார்களாம். பெர்டினன் என்ன ஆனது என்பது பரபர கிளைமாக்ஸ்.
குட்டித் தாத்தா /நடாலே நோர்டன்/
அமெரிக்கா யாரும் இல்லாத தீவில்,ஒரு தாத்தா மட்டும் இருந்தார். அவருடன் பேசுவதற்குப் பூனை ஒன்று இருந்தால் நன்றாக இருக்குமே என நினைத்தார்.ஒரு நாள் கடலில் கடுமையான புயல் அடித்து, இவரின் வீட்டை அடித்துச் செல்கிறது. தாத்தா,மரத்தில் ஏறி உயிர் பிழைத்தார். அப்போது,பெரிய படகு ஒன்று தீவில் ஒதுங்க, அந்தப் படகில் ஓர் அழகான பூனை.அந்தப் பூனைக்கும் தாத்தாவுக்கும் இடையே நடக்கும் உரையாடலே இந்த அருமையான கதை.
Be the first to rate this book.