பரத நாட்டியம் மிகப் பண்டையகாலத்தில் தோன்றியதானாலும், அது இடைவிடாமல் தென்னிந்திய மன்னர்களால், அதிலும் சிறப்பாக தஞ்சை அரசர்களால், தத்தம் காலத்தில் ஊக்கமளித்து வளர்க்கப்பட்டு, இன்றும் நடைமுறையில் உயிரும் ஆற்றலும் படைத்து உலவிவரும் கலையாயிருக்கிறது. என்பதை மறக்கக்கூடாது. காலஞ் சென்ற பந்தனைநல்லூர் மீனாக்ஷிசுந்தரம் பிள்ளை, இந்த நூலின் ஆசிரியர்களுள் ஒருவருக்குக் குருவாயிருந்த காலஞ்சென்ற கந்தப்பா முதலிய அறிவுமிக்க நாட்டிய ஆசிரியர்களின் பரம்பரை, இக்கலையின் ஸம்பிரதாயத் தொடர்பைக் காப்பாற்றி வந்திருக்கிறது. பரத நாட்டியத்தைப் பற்றிய நூல் எதுவாயிருந்தாலும் அது மேலே சொன்ன ஸம்பிரதாயத்தைத் தழுவியிருக்குமளவில்தான் உண்மையில் பயன் படைத்ததாகும்.
ஆச்சரியமானதோர் ஆசிரியரொத்துழைப்பு இந்நூலில் காணப்படுகிறது. இதன் ஆசிரியரில் ஒருவர் இந்த சாஸ்திரத்தில் ஆழ்ந்ததும் பரந்ததுமான படிப்புள்ள ஸமஸ்கிருதப் பேராசிரியர்; மற்றொருவர், தென்னிந்திய ஸங்கீத, நாட்டியத் துறைகளில் ஆற்றல்வாய்ந்த குடும்பங்களுள் தலைசிறந்ததான குடும்பமொன்றில் தோன்றியவரும், ஆற்றல்மிக்கவரும், அபிநயக் கலையின் தேர்ச்சியில் ஒப்பற்ற புகழடைந்தவரும் ஆவர். இவ்விருவரையும் சேர்த்து இந்த பரத நாட்டிய நூலை எழுதச் செய்யவேண்டுமென்ற இன்கருத்து தோன்றியதற்கு 'தென்னிந்திய மொழி நூல் டிரஸ்டினரை' நான் பாராட்டுகிறேன். இக்கலையில் இன்புறுபவர், இந்தியப் பண்பாட்டை ஆராய்பவர், இவர்கள் ஒவ்வொருவர் கையிலும் இருக்கவேண்டிய நூல் இது.
Be the first to rate this book.