இந்தக் கலியுகத்தில் உங்கள் கனவுகளையெல்லாம் நனவாக்கிட உங்களுக்குத் தேவை ஒரு புதிய பாதை சற்றே யோசித்துப்பாருங்கள். தொன்றுதொட்டு, தலைமுறை தலைமுறையாக, வாழையடி வாழையாக, நமக்கு போதிக்கப்பட்டு வந்த கருத்துகளையும் அறிவுரைகளையும் பின்பற்றி அவற்றின் அடிப்படைத் தத்துவங்களின் வரையறைகளுக்கு உட்பட்டுதான் நம் வாழ்க்கையை நடத்திவருகிறோம். இந்நிலையில், இவையெல்லாம் இன்றைய வாழ்க்கை முறைக்கு சற்றும் உதவாது என்று எவரேனும் சொன்னால் எப்படி உணர்வீர்கள்?
கூடவே, தற்போது நீங்கள் வாழும் வாழ்க்கையைக் காட்டிலும், இன்னும் மேலான, வளமான, நிறைவான வாழ்க்கை வாழ்வதற்கு அசுரர் பாதையைப் பின்பற்றுவதுதான் சிறந்த வழி என்று சொன்னால், எப்படி உணர்வீர்கள்?
அசுரர்களின் வாழ்க்கை பிரமிக்கத்தக்க அளவுக்கு வெற்றிகரமாக விளங்கியதற்கான மூலகாரணத்தைக் கண்டறிந்து, சச்சரவுகள், குழப்பங்கள், முரண்பாடுகள் நிறைந்த இந்தக் காலக்கட்டத்தில், நம் வாழ்க்கை முறையையும் நமக்குத் தோதாக, வெற்றிகரமாக மாற்றிக்கொள்ளும் வகையில், அவற்றிலிருந்து கற்றுக்கொள்வது நன்மை பயக்குமல்லவா?
கற்பனைக் கதைகளிலிருந்து வேறுபட்ட இந்தப் புதினத்தில், தேசிய அளவில் விற்பனையில் சாதனை படைத்த 'அசுரா: டேல் ஆஃப் தி வாங்க்விஷ்ட்' எனும் புத்தகத்தின் ஆசிரியரான ஆனந்த நீலகண்டன், நாம், இந்தக் கலியுகத்தில், சற்றே மாறுபட்ட வாழ்க்கை வாழ்வதற்கான வழிமுறைகளை தெளிவாக விளக்கியுள்ளார்.
நம் மனதையும் அறிவையும் ஆளும் ஆறு எதிரிகள் என்று சித்தரிக்கப்படும் கோபம். வேட்கை, பேராசை, சபலம், பெருமை, மற்றும் போட்டி மனப்பான்மை அல்லது பொறாமை ஆகிய குணாதிசயங்கள் தொடர்பான கட்டுக்கதைகள் நம்மை எப்படிக் கட்டுப்படுத்துகின்றன என்பதைப் பற்றி தர்க்க ரீதியாக தெளிவுடன் எடுத்துரைத்துள்ளார், ஆசிரியர்.
தற்கால வாழ்க்கைமுறைக்கு ஒவ்வாத பழமையான உபதேசங்கள், நம் வாழ்வில் நாம் பெற வேண்டிய வெற்றிகளையும் அதைத் தொடர்ந்த மகிழ்ச்சியையும் அடைய முடியாமல், நம்மை முன்னேறவிடாமல் தடுக்கின்றன என்பதையும் விளக்கியுள்ளார். அதே புராண இதிகாசங்களை உவமையாகக் கொண்டு, ஆணித்தரமான ஆதாரங்களுடனும் எடுத்துக்காட்டுகளுடனும், மேற்கூறிய ஆறு குணாதிசயங்களைக் கொண்டு நம் வாழ்வின் இலக்குகளை அடைந்து வெற்றிக்கொடி நாட்டலாம் என்பதை திறம்பட விளக்கியுள்ளார்.
கேரள மாநிலத்திலுள்ள கொச்சி நகரின் புறநகர்ப் பகுதியில் அமைந்த திருப்பூணித்துறை எனும் பழமையான சிறிய கிராமத்தில் பிறந்தவர் ஆனந்த் நீலகண்டன். தேவைக்கு அதிகமாகவே கோவில்கள் இருந்த ஒரு கிராமத்தில் அவர் வளர்ந்து வந்ததால், இந்தியப் புராணங்களும் இதிகாசங்களும் அவருக்கு பிரமிப்பூட்டியதில் வியப்பேதும் இல்லை. இதில் வேடிக்கையான விஷயம் என்னவென்றால், இந்தியக் காவியங்களின் எதிர்நாயகர்கள்தாம் அவரைப் பெரிதும் கவர்ந்தனர். அவர்களுடைய மாயாஜால உலகைப் பற்றி அவர் வியந்தார். நம்முடைய இதிகாசங்களில் வருகின்ற, அடக்கி ஒடுக்கப்பட்டவர்கள் மற்றும் வஞ்சகமாக வீழ்த்தப்பட்டவர்களின் கதைகளை எடுத்துரைக்க வேண்டும் என்ற தணியாத தாகம் அவரைத் தூங்கவிடவில்லை. நாம் நம்முடைய இதிகாசங்கள் குறித்து அறிவுபூர்வமாகக் கேள்வி கேட்காமல் அவற்றை மௌனமாக ஏற்றுக் கொண்ட மனப்போக்கின் காரணமாக, ஒதுக்கி வைக்கப்பட்டிருந்த ராவணன், துரியோதனன் போன்ற உண்மையான கதாநாயகர்களை, ஆனந்த் நீலகண்டன் முறையே தன்னுடைய ‘அசுரன்’, ‘கௌரவன்’ ஆகிய நாவல்கள் மூலம் உயிர்த்தெழ வைத்துள்ளார்.
Be the first to rate this book.