தமிழ்ச் சமூகத்தில் அருந்தியர் குறித்து அனைத்து தரப்பட்ட மக்களும் சிந்திக்கவும், விவாதிக்கவும் தொடர்ந்து பலர் எழுதவும் அடிப்படைக் காரணமாக அமைந்தது மாற்கு எழுதிய அருந்ததியர் வாழும் வரலாறு' என்கிற நூல்தான், அவரது எழுத்தும், ஆழ்ந்த ஆராய்ச்சி அணுகுமுறையுமே தமிழக அறிஞர்கள் பலரை அருந்ததியர்கள் பக்கம் திரும்பிப் பார்க்க வைத்தது.
அருந்ததியர்கள் என்றாலே செருப்பும், துடைப்பமுமே நினைவுக்கு வந்த சாதிய மூளையை அடித்து நொறுக்கி ஒண்டிவீரன், பொட்டிப் பகடை, முத்தன் பகடை, ஓடிக்குத்துவான் பகடை ஆகியோர்களின் வரலாறுகளின் மூலம் அருந்ததியர்கள் என்றால் 'மாவீர்கள்' என்ற வரலாற்றை நிறுவியவர். இந்நூலை உருவாக்கும் பணியில் மாற்கு அவர்கள் ஈடுபடும்போது அவர்பட்ட பாடுகளை, வேதனைகளை உடனிருந்து பார்த்தவன் நான். பல கிராமங்களில் உள்ளே நுழைய முடியாத நிலை எங்கெங்கு அலைந்தாலும் எந்த ஆவணமும் கிடைக்காத கையறு நிலை என்பதைத் தாண்டி அவர் பெற்றெடுத்த அருந்தமிழ் பொக்கிசம் இந்நூல் அவர் உருவாக்கியது இந்நூலை மட்டுமல்ல, என்னைப் போன்ற பல போராளிகளையும்தான்.
-கு. ஜக்கையன், எம்.ஏ.எம்.பில்., நிறுவனர், ஆதித்தமிழர் கட்சி
தமிழகத்தில் அருந்ததியர் குறித்தான ஆய்வுகள் அதிகம் இல்லை காரணம் இவர்கள் வரலாறற்றவர்கள் என்பது அல்ல பொருள். மாறாக இவர்களது வரலாறு கண்டுகொள்ளப்படவில்லை. இச்சூழலில் மாற்கு அவர்கள் அருந்ததியர் குறித்த ஆய்வுகளில் களம் சார்ந்து தன்னை ஈடுபடுத்திக் கொண்டு சுமார் ஏழு ஆண்டுகளுக்கும் மேலாக இம்மக்களிடையே பணி செய்து மிக அணுக்கமான உறவைப் பேணி இந்நூலைப் படைத்துள்ளார். விருதுநகர் மாவட்டத்தை உள்ளடக்கிய கிராமங்களில் உள்ள அருந்ததிய மக்களின் வாய்மொழி வரலாற்றின் மூலம் மானிட இயல் நோக்கில் இந்நூலை எழுதியுள்ளார். மேலும் அருந்ததியர்களின் மொழி வரலாறு குறித்தான ஆய்வுகள் நிறைய வரவேண்டியுள்ளது. இச்சூழலில் இம்மக்களின் நினைவுகளிலிருந்து செய்திகளைப் பெற்று அவற்றை மக்களின் வரலாறாகப் படைத்துள்ளதின் மூலம் இந்நூல் முக்கியத்துவம் பெறுகிறது.
-முனைவர் மா. காமாட்சி, வரலாற்று ஆராய்ச்சியாளர்.
Be the first to rate this book.