அந்தியில் மலர்ந்த மொட்டுகள்
உமையவன்
மும்மாரி பொழிந்ததெங்கள் வானம்!-இன்று
திசைமாறிப் போனதேனோ மேகம்?
கல்மாரி விழுந்த தெல்லாம் போச்சு!-குளிர்
காற்றுகூட வெப்பக்கதிர் ஆச்சு!
முப்போகம் விளைந்த தெங்கள் பூமி! -இன்று
முட்புதராய்ப் போனதேனோ சாமி?
முக்கனிகள் தந்த நல்ல மரங்கள் விறகாய்
எரிந்ததாலோ இன்று இந்த வினைகள்?
விளைநிலத்தை வீடாக்கி வைத்து அதில்
வீசுதென்றல் தனைச்சேர்த்துப் புதைத்து!
காய்கறிகள் பயிர்செய்ய வளர்த்து -அதில்
சுடும்நஞ்சை உரமாகத் தெளித்து!
நிறம்மாற்றி வைத்துவிட்டோம் நீரை -அமைதி
நிலைமாற்றிக் கதறவிட்டோம் ஊரை!
கரைமாற்றிக் கட்டிவிட்டோம் நதியை! -குப்பைக்
குளமாக்கி வைத்துவிட்டோம் கடலை!
கரும்புகையால் காற்றில் மாசைக் கூட்டி உச்சி
வான்துளைக்க வீசிவைத்தோம் ஈட்டி!
மனிதமெனும் மாட்ச்சிமையை மறந்து -சுய
நலமதுவே வாழ்க்கையென நினைந்து!
அச்சமடம் மானமதை மறந்து - தமிழன்
உச்சமெனும் பெரும்புகழை துறந்து!
குணம்மாறிப் போனதம்மா வாழ்க்கை -அதனால்
திசைமாறிப் போனதம்மா இயற்கை!!!
Be the first to rate this book.