ஏ.கே.செட்டியாருக்கு அறிமுகம் தேவையில்லை.ஆனால் தன்னை முன்னுருத்திக் கொள்ளாத சுபாவத்தால் இவரது பிரபல்யம் பெயரளவில் மட்டும் சுருங்கிவிட்டது. இந்திய அளவில் ஆவணப்பட இயக்கத்தின் முன்னோடி இவர். ‘மகாத்மா காந்தி’ படம் எடுத்தவர். ‘குமரிமலர்’ பத்திராதிபர். காந்தியை நேரில் கண்டவர். நேத்தாஜீ உடன் நெருங்கிப் பழகியவர். பாரதி குறித்த ஆய்வுலகின் விதை நெல். ஒருமுறையல்ல மூன்று முறை உலகம் சுற்றிய தமிழர். இதில் இவர் ரஷ்யாவுக்கு மட்டும் சென்றதில்லை. காந்தியவாதி, சுத்த சுதேசி,காப்பி பிரியர், ஒழுக்க சீலர். நவீன பயண இலக்கியத்தின் தலைவாசல். இவரது ‘குடகு’ ஓர் இனவரைவியல் ஆவணம்.
இவரது வாழ்க்கையில் பட்டினி இருந்தது, பஞ்சம் இல்லை. பணமிருந்தது, ஆடம்பரமில்லை. புகழ் இருந்தது, பகட்டில்லை. அரசியல் இருந்தது, அதிகாரம் இல்லை. செட்டியாரைப் பற்றி நினைக்கும் போது ஞாபகத்தில் வருவது இரண்டு. ஒன்று அவரின் அயராத உழைப்பு. இரண்டு, சோரம் போகாத பிழைப்பு.
முதன் முறையாக அவரது முழுப்படைப்புகள் பலச் சிரமங்களைத் தாண்டி இரு தொகுதிகளாய் நூலாக்கம் பெறுகிறது. இதில் ஏறக்குறைய 30 கட்டுரைகள் இதுவரை நூல்வடிவம் பெறாதவை. கூடவே ‘பஸ் பிரயாணம்’ தொகுப்பும் முதன்முறையாக நூலுருவம் பெறுகிறது. ஒட்டு மொத்தமாக, தவறுகள் களைந்த தரமான பிரதியாக வருகிறது. இத்தனைக் காலங்கள் கடந்து ஏ.கே.சி குறித்து தன் ஆய்வில் புதிய வெளிச்சங்களைக் கண்டடைந்திருக்கிறார் கடற்கரய் மந்தவிலாச அங்கதம். அதற்கு அவரது அசலான முன்னுரை சான்று.
Be the first to rate this book.