இலக்கியம் என்பது வாழ்வின் நிழல் மட்டுமல்ல, அது வாழ்வின் ஆழமான மௌனங்களையும் பேசாத சொற்களையும் பிரதிபலிக்கும் ஒரு கண்ணாடி. இந்தப் படைப்பில் உள்ள சிறுகதைகள், அன்றாடம் கடந்து செல்லும் மனிதர்களின் அக உலகை, குறிப்பாக இஸ்லாமிய வாழ்வியலின் பின்னணியில் பேசுகின்றன.
இக்கதைகள் வெறும் சம்பவங்களின் தொகுப்பு அல்ல; மாறாக, இஸ்லாமிய சமூகத்தின் பண்பாட்டு அசைவுகளை, அதன் நம்பிக்கைகளை, மனித பலவீனங்களை மிக யதார்த்தமாகப் பதிவு செய்யும் ஒரு முயற்சி. பிழைப்புக்காக வெளிநாடு செல்லும் இளைஞர்கள், பெண்கள், தெருவோர மஸ்தான்கள் எனப் பலதரப்பட்ட மாந்தர்கள் வழியே இந்த உலகம் உங்கள் முன்னே விரிவடைய வைக்கும் என நம்புகிறேன். வாசிப்பின் வழியே நீங்கள் சந்திக்கும் இந்த முகங்கள், உங்கள் அருகாமையில் வாழும் யாரோ ஒருவரை நினைவுபடுத்தக்கூடும். அந்த நினைவூட்டலே இந்தப் படைப்பின் வெற்றியாக நான் கருதுகிறேன்.
இந்தக் கதைகளில் உலாவும் கதாபாத்திரங்களுக்கு இஸ்லாமிய பெயரை நீக்கிவிட்டாலும் கதையாக முழுமை பெறலாம். என்றாலும் சம்பவங்கள் நான் பார்த்த, கேட்ட நிஜமென்பதால் கதையையும் கதாபாத்திரப் பெயர்களையும் அதே சமூகத்தின் சாயலோடு பதிவு செய்திருக்கிறேன். சம்பவங்களை என் பார்வையில் கலைத்துப் போட்டிருக்கிறேன்.
- கா. ரபீக் ராஜா
கா.ரபீக் ராஜா. சிவகங்கை மாவட்டம் காரைக்குடியில் 1986ஆம் ஆண்டு பிறந்தவர். காரைக்குடி அழகப்பா அரசு கலைக் கல்லூரியில் தனது இளங்கலை வணிகப்பொருளாதாரம் படிப்பை முடித்தார்.
இவரது எழுத்துகள் சொல்வனம். கீற்று, திண்ணை. வாசகசாலை, அந்திமழை, தி இந்து, நோசன்பிரஸ் போன்ற மின்னிதழ்களில் கட்டுரைகளாகவும் கதைகளாகவும் வெளியாகி நல்ல கவனத்தையும் பாராட்டுகளையும் பெற்றுள்ளன. தற்கால இலக்கிய சூழலில் இயங்கி வருகிறார்.
காரைக்குடியில் நண்பர்களுடன் இணைந்து சம்பை ஊற்று வாசகர் வட்டம் நடத்தி வருகிறார். தனியார் நிறுவனமொன்றில் பணியாற்றி வரும் இவர் திருமணமாகி இரண்டு குழந்தைகளுடன் காரைக்குடியில் வசித்து வருகிறார்.
Be the first to rate this book.