ஓவியத்தில் அழுத்தமாகத் தீட்டப்பட்ட வண்ணங்களைப் போல வாழ்க்கையை அழுத்தமாகவும், விரிவாகவும் படம்பிடித்துக் காட்டும் கலை ஓர்மையே எழுத்தாளர் சரிதா ஜோவின் தனித்துவம் என்று சொல்லலாம். ஆரவாரமோ, உரத்த குரலோ இல்லாமல் வாழ்க்கையை அப்படியே பிரதிபலிப்பதைப் போன்ற பாவனையுடன் ஆனால் தன்னுடைய தனித்துவமான கதை சொல்லும் முறையினால் அத்தனை கதைகளிலும் தனி முத்திரை பதித்திருக்கிறார் சரிதா ஜோ. எந்த மெனக்கெடலும் இல்லாமல் வட்டார மொழியைக் கையாண்டிருக்கின்றார். அதனால் கதைகளின் களம் இன்னும் வலுவாகிறது. சமீபத்தில் வாசித்த கதைகளில் வட்டார மொழியை மிக நேர்த்தியாகக் கையாளும் எழுத்தாளராக சரிதா ஜோ திகழ்கிறார். ஒவ்வொரு கதையிலும் கலை தன் ஒளியைப் பாய்ச்சியிருக்கிறது. அந்த ஒளியில் வாழ்க்கை நமக்குப் புதிதாகத் தெரிகிறது. அப்போது நாம் ஆச்சரியப்படுகிறோம். கலங்குகிறோம். திகைத்து நிற்கிறோம். ஆனந்தமடைகிறோம். சரிதா ஜோவின் கலை நம்மை ஆற்றுப்படுத்துகிறது. இந்தக் கதைகள் வாசகர்களின் மனதை விட்டு என்றென்றும் அகலாதென்பதை உறுதிப்படுத்துகிறது. ஒரு புதிய கலகக்குரலாக இந்தக் கதைகள் வெளிவந்திருக்கின்றன.
-உதயசங்கர்
ஈரோட்டைச் சேர்ந்த கதைசொல்லி சரிதா ஜோ,உளவியல், தமிழ், கல்வியியல் ஆகிய துறைகளில் முதுநிலைப் பட்டமும், தற்காப்புக் கலையான குங்ஃபூவில் கறுப்புப் பட்டையும் பெற்றுள்ளார். கதை சொல்லியாகவும் சிறார் எழுத்தாளராகவும் வானொலி நிகழ்ச்சித் தொகுப்பாளராகவும் பட்டிமன்றப் பேச்சாளராகவும் மிளிர்கிறார்.
'ஸ்கேன் ஃபவுண்டேஷன் இந்தியா விலங்குகள் நல அமைப்பின் தூதுவராக இருக்கிறார். தமிழ்நாடு கலை இலக்கிய மேடையின் அசோகமித்திரன் நினைவு படைப்பூக்க விருதும் திருப்பூர் சக்தி விருதும் பெற்றுள்ளார். மந்திரக் கிலுகிலுப்பை இவருடைய முதல் சிறார் நாவலாகும்.
Be the first to rate this book.