திராவிடர்கள், சிந்துவெளியில் பயிர்த் தொழிலுக்கு அடிகோலி அதைப் பாங்குற வளர்த்து, மட்பாண்டம் வனைதல், துணி நெய்தல், வெண்கல ஏனங்களைச் சமைத்தல், நாடு, நகரம், வீடு, தெருக்கள், குளங்கள், மூடுசாக்கடைகள் அமைத்தல் போன்ற நனி சிறந்த நாகரிகங்களைக் கி.மு. 4000ஆம் ஆண்டுகளுக்கு முன்பே கண்டவர்கள். ஆரியர்கள் இந்நாட்டிற்கு வருவதற்கு ஆயிரம் ஆண்டுகளுக்கு முன் மொழி, எழுத்துக்களை அமைத்தவர்கள். சைவ சமயத்தையும், சிவன், சத்தி, ஆடவல்லான், கணபதி முதலிய தெய்வ உருவங்களையும் கண்டவர்கள் - கப்பல் கட்டும் தளத்தை உலகில் முதன்முதலாக உருவாக்கியவர்கள். ஆழ்கடல்களைக் கடந்து அயல் நாட்டினரோடு வணிகம் வளர்க்கத் தெரிந்தவர்கள். இவர்களே உலகிலே முதன் முதலாக ஒப்பற்ற நாகரிகத்தை உருவாக்கியவர்கள் என்ற உண்மையைச் சிந்துவெளி அகழாய்வும் ஆதித்தநல்லூர் அகழாய்வும் எடுத்துக் காட்டின. சிந்துவெளிப் பண்பாடு, திராவிடப் பண்பாடு என்ற முடிபு, ஆதித்தநல்லூர்த் தமிழர் பண்பாட்டை ஆய்வதற்கு ஆக்கமும், ஊக்கமும் அளித்தன என்பது உணர்தற்பாலது.
Be the first to rate this book.